ஊரடங்கில் காதலியை சந்திக்க அனுமதி கேட்ட இளைஞர்... நச்சென்று பதில்கொடுத்த பொலிசார்
ஊரடங்கில் தனது காதலியை பார்க்க வெளியே செல்ல வேண்டும் என்றும் அதற்கு என்ன ஸ்டிக்கர் நான் ஒட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மும்பை போலீஸ் அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மும்பையில் ஊரடங்கு உள்பட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் காரணமில்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் தன்னுடைய காதலியை பார்க்க வெளியே செல்லவேண்டும் என்றும் அதற்கு என்ன ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்று மும்பை பொலிசாரிடம் டுவிட்டரில் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் கூறிய மும்பை பொலிசார் ’உங்களுடைய அத்தியாவசிய தேவை என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக உங்களது தேவை எங்களது அத்தியாவசிய வகைகளின் கீழ் வராது. அதனால் நீங்கள் இப்போதைக்கு வெளியே செல்ல முடியாது.
நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ்நாள் முழுதும் வாழ்வதற்கு ஒரு சிறிய கால இடைவெளியை கடைபிடியுங்கள் என்று பதிவு செய்துள்ளது. மும்பை பொலிசாரின் இந்த பதிவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.