கொரோனாவின் மூன்றாவது அலையை தவிர்க்கமுடியாது... மக்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், மூன்றாவது அலையை தவிர்க்கமுடியாது என்றும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை உச்சத்தில் உள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பெற்றுள்ள முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் சில தகவல்களை கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 3வது அலையை தவிர்க்க முடியாது. வைரஸ் அதிக அளவில் பரவும் நிலையிலும் மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்று தற்போது கூறமுடியாது.
3வது அலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மாறுபட்ட கொரோனா வைரசும் உண்மையான கொரோனா போலவே பரவுவதுடன், மனிதர்கள் மூலமே இந்த வைரஸ் பரவுகின்றது.
தற்போதுள்ள அனைத்து வகை கொரோனா பாதிப்புக்கு எதிராகவும் தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது. புதிய வகை கொரோனா வைரசை தடுப்பது குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தியா மற்றும் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்.